Sunday, January 29, 2012

The Hindu : Today's Paper News : Dalit panchayat chief prevented from hoisting tricolour

The Hindu : Today's Paper News : Dalit panchayat chief prevented from hoisting tricolour

என்று விழிப்பீர்கள் இந்த "பார்ப்பனீய போதையிலிருந்து" ?

"இந்து" நாளிதழின் இந்த செய்தி... இன்று மட்டுமல்ல, நாள்தோறும் சாதிக்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணமிருகிறது... என்பதற்கு... நாளிதழ்களே சாட்சி.தீண்டாமை இல்லை,இட ஒதுக்கீட்டின் அவசியம் இனி இல்லை, நம் நாடு "சமூக சமத்துவத்தை" அடைந்துவிட்டது, பொருளாதாரம் வளர்ச்சிக்கு "இட ஒதுக்கீடு" முட்டுக்கட்டையாக உள்ளது என
மாயத்தோற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த செய்திகள் கண்களில் பட்டிருக்கும்.ஆனால் தீண்டாமையின் வலி அவர்களுக்கு புரியாததால் அது புத்திக்கு எட்டுவதில்லை.

நெடுங்காலமாய் பெரியாரும் அம்பேத்காரும் பார்பனர்களை எதிர்த்து போராடியதாக தவறாக நினைக்கப்படுகிறது.அவர்கள் எதிர்த்து "பார்ப்பனியம்". பார்ப்பனியம் என்றால்... இந்து மதத்தின் வேதம் என்ற பெயரில் ஞாயப்படுத்தும் வருணாசிரமத்தையும்...அதை அடிப்படையாக கொண்டிருக்கும் சாதி அமைப்பையும் தான்.

ஒரு காலம் வரை பார்பனர்கள் ,அரசர்கள் மூலமாக... 'வேதம்' சொல்வதாக சாதியின் கட்டுப்பாடுகளை மீறியவர்கள் கடுமையான தணடனைகள் அளித்து ... சாதியின் கட்டுக்கோப்பு குலையாமல் 'அடிமைசாதி'களாக தங்களுக்கு சேவை செய்ய வைத்தனர்.

இன்று... "மேல்சாதி" என்ற போதைக்காக..." சாதி இந்துக்கள் " என்று கருதப்படும் இடைநிலை சாதியினர்
பார்பனியத்தை தங்கள் பாதையாக்கி சாதி அழியாமல் வேருன்ற காரணமாகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை... சாதியின் தீய நாக்குகளாய் மாறி தலித் மக்களை பொசுக்குவதை...முதலில் முதலியார், பிள்ளை, நாயுடு, ரெட்டியார்... என்ற சாதிகள் பார்பனர்களின் வாரிசுகளாய் செய்தனர். "மேல்சாதி" என்ற அங்கீகாரத்தை கட்டிகாக்க, தங்களது நிலையை சாதியின் படிநிலையில் மேலே நிறுத்திக்கொள்ள... முடிந்த வரை 'சாதிபஞ்சாயத்துகள்' மூலமாக சாதி அமைப்புகளை மீறி நடப்பவர்களை தண்டித்தனர். தங்கள் நிலங்களில், வீட்டில், கடைகளில் கொத்தடிமைகளாய் இருந்த, சாதி படியில் கீழ்நிலையில் இருந்தவர்களை கடுமையாக தண்டித்து...சாதியின் காவலர்களாய் மாறினார்கள். அவ்வாறு தண்டிக்கப்பட்டோரில் தலித்துகளுடன், தற்போது அரசின் அட்டவணையில் பிற்படுத்தப்பட்டோர் , மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறப்படும்... சாதிகளான கவுண்டர், நாடார், படையாட்சி, கள்ளர், தேவர்... எல்லா சாதியினரும் அடங்கும்.

இப்போது, "மேல் சாதியின் காவலர்களாய்" கவுண்டர்களும் நாடார்களும் தேவர்களும் வன்னியர்களும் கள்ளர்களும், அவர்களுக்கும் கீழே ஒரு சாதியை அடக்கி... மேல்சாதி போதையில் மிதக்கிறார்கள். விளிம்புநிலையில் வாழ்ந்தாலும்... சாதி தரும் போதையில் எந்த சாதீய அமைப்பில் அவர்களும் சுயமரியாதையின்றி வாழ்ந்தனரோ அதே அமைப்பை கட்டிகாக்க, தலித் மக்களை தங்கள் சாதீய கரங்களை கொண்டு நசுக்கவும் தலைப்படுகிறார்கள்.தமிழ்நாட்டின்.... இத்தகைய நிகழ்வுகள் இதற்கான சாட்சி.

இந்த "சாதி இந்துக்கள்",இரட்டை நிலைப்பாடு எடுக்கின்றனர். சமூகத்தில் பின் தங்கியிருக்கும் இவர்களுக்கு ஒரு பக்கம், போலியான மேல்சாதி மரியாதை தேவைப்படுகிறது, மற்றொரு பக்கம் இட ஒதுக்கீடும் தேவைப்படுகிறது.
சாதி... போதை... எல்லா இடைநிலை சாதிகளையும் ஆட்டுவிக்கிறது.

என்று விழிப்பீர்கள் இந்த "பார்ப்பனீய போதையிலிருந்து" ?
என்று சாதியின் பிடியிலிருந்து மீள்வீர்கள்..?
இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்கும் பிற்படுதபட்டவன், அவனுக்கு கீழ் ஒரு அடிமை சாதி, மனித உரிமை இழந்து ஊருக்கு ஒதுக்குபுரம்மாய் சேரிகளில் இருக்க வேண்டும் என்பது எந்தவிதத்தில் ஞாயம் ? புரியவில்லை. சிந்திந்துப்பாருங்கள் ?

தலித் மக்களுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற,தீண்டாமை கொடுமைகளை இழைக்கும் உங்களுக்கு இட ஒதுக்கீடு கோரவோ அதன் பலனை அனுபவிக்கவோ எந்த தாத்பரியமும்... நியாயமும் இல்லை.